காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் பொலிஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்னால் ஒன்றுதிரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி நிறுவத்தின் ஊடகவியலாளர் லலித் கே ஜா அங்கு சென்றிருந்தார்.
அப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், ஒரு கட்டத்தில் லலித்தை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி : காலிஸ்தான் ஆதரவு தலைவரை கைது செய்ய தீவிர தேடுதல்
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களிடம் இருந்து லலித்தை மீட்டு காப்பாற்றினர்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.