சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்து பல மாதங்கள் ஆகியும் அங்கு பொருளாதாரம் மந்த நிலையிலேயே உள்ளது.
இதனால் சீனாவின் முக்கிய வர்த்தக நிறுவனமான அலிபாபாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அலிபாபா நிறுவனம், செயலிகள் (Apps) உருவாக்கம் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பல துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நிறுவனத்தின் வளர்ச்சியை தூண்டும் வகையில் ஒரு பெரிய நிர்வாக மறுசீரமைப்பை அலிபாபா மேற்கொண்டுள்ளது.
அதாவது, மின்னணு வர்த்தக குழுமத்தின் தலைவராக உள்ள எடி வூ தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தற்போது தலைவராக உள்ள டேனியல் ஜாங் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்படுவார்கள்.
அதேபோல் நிர்வாக துணைத் தலைவரான ஜோசப் சாய் அலிபாபா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். தைவானில் பிறந்த இவர் அலிபாபா நிறுவனம் உருவானதுக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.