தமிழகத்தில், ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்ததால் “டிஸ்சார்ஜ்” செய்யப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 4 ஆயிரத்து 496 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனதால், தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 52 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 68 பேர் உயிரிழந்ததால், கொரோனா உயிர்ப்பலி 2 ஆயிரத்து 167 ஆக உயர்ந்தது. சென்னை – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காஞ்சிபுரத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண்
ஒருவர் உயிரிழந்தார்.
மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 17 லட்சத்து 37 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்ததால், கொரோனா சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பதிவாகி உள்ளது.