லடாக்கில் 38 ஆயிரம் சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பைச் சீனா தொடர்ந்து தனது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய – சீன எல்லைத் தகராறு தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார்.
இதன்போது கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் திகதி இந்திய நிலப் பகுதியைக் காக்க நிகழ்ந்த சண்டையில் 20 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததையும் இராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடி லடாக் சென்று வந்ததையும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
லடாக்கில் 38 ஆயிரம் சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பு தொடர்ந்து சீன ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஐயாயிரத்து 180 சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பைச் சீனாவுக்குக் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அருணாசலப் பிரதேசத்தில் தொண்ணூறாயிரம் சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பைச் சீனா உரிமை கோருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்களின்போது இந்திய இராணுவத்தினர் பொறுமையைக் காப்பதாகவும் நமது நிலப்பரப்பைக் காக்க வேண்டியுள்ளபோது துணிச்சலுடன் போரிடுவதாகவும் குறிப்பிட்டார்.
நமது எல்லையைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் இதில் எவரும் ஐயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்த அவர், எல்லைச் சிக்கல் தொடர்பாக இரு நாடுகளும் செய்துள்ள உடன்பாடுகளை 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனா மதிக்கவில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.