கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக சன் டி.வி. குழுமம் 3 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு சன் டி.வி. குழுமம் பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது.
கொரோனா முதல் அலையின்போது, பேரிடர் மேலாண்மை நிதிக்கு நிதி அளித்ததுடன், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு சன் டி.வி. குழுமம் சார்பில் நேரடியாகவும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை எதிர்கொள்ள 30 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக சன் டி.வி. குழுமம் அறிவித்தது. அதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் டி.வி. குழுமத் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிடம் சன் டிவி குழும இயக்குநர் காவேரி கலாநிதி மாறன் 3 கோடி ரூபாய்க்கான காசோலையை பெங்களூரில் நேற்று வழங்கினார்.
அப்போது, சன் டி.வி. குழும இயக்குநர்கள் முரசொலி செல்வம், விஜயகுமார் மற்றும் துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன், சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் ஆகியோரும் உடனிருந்தனர்.
பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முன்னிலையில் இருக்கும் சன் டி.வி. குழுமம், கொரோனா முதல் அலை தாக்கத்தின்போதும், மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிகளுக்கு நிதி அளித்தது. பேரிடர் நிவாரண நிதி, சமூக மேம்பாடு, ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்கள் போன்ற பணிகளுக்கு சன் டி.வி. குழுமமும், சன் பவுண்டேஷனும் இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.