சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 600 கோடி ரூபாவை விட அதிகமாகும் என கடற்படை தெரிவித்துள்ளது.
தென் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருட்களுடன் 2 படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர், லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது ஒரு படகிலிருந்து சுமார் 75 கிலோகிராம் ஹெரோயினும் சுமார் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டதுடன் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் வரக்காபொல பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இருவரும் 7 நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று பிற்பகல் 330 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினும் சுமார் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கொழும்பில் வசிப்பவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுடன் தொடர்புபட்ட ஈரானிய பிரஜைகள் குறித்தும் பாதுகாப்புத் தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில், சந்தேகநபர்களின் கையடக்கத்தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.