இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவும் அபாயம் காணப்படுவதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
ஆப்பிரிக்காவில் இருந்து அரபு நாடுகள், பாகிஸ்தான் வழியாக வடமாநிலங்களுக்குள் புகுந்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குள் புகுந்துள்ளது.
அடுத்த கட்டமாக கிழக்கு நோக்கி பயணித்து வரும் வெட்டுக்கிளிகள் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களை நோக்கி பறந்து கொண்டு இருக்கின்றன. ஒரு நாளைக்கு 150 கி.மீட்டர் வரை பயணம் செய்கிறன.
இந்த வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களில் கர்நாடகா வரை பரவும் என்று ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு கணித்துள்ளது. மொத்தமாக இந்தியாவில் மட்டும் 17 மாநிலங்களில் பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வந்துள்ள வெட்டுக்கிளிகள் கூட்டத்துக்கு பின்னால் இன்னொரு கூட்டம் வந்து கொண்டிருப்பதாகவும், குறித்த வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் மத்தியில் இந்தியாவிற்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.