Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கில் தனியார் மருத்துவ பீடங்கள் தேவை! | யமுனாநந்தா

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்கள் தேவை! | யமுனாநந்தா

2 minutes read
யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் ...

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கில் காணப்படுகின்ற வைத்தியர்கள் பற்றாக்குறை நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “வட பகுதியில் வைத்தியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அண்மைக்காலங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலே நடத்தப்பட்டிருக்கின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்கள் அங்கு கடமைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. ஆனால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுமார் 80 இற்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகின்றார்கள். குறிப்பாக குழந்தை மருத்துவம் உட்பட சிறு குழந்தைகளுக்கு உரிய சிறப்பு மருத்துவர்கள், இதய சிகிச்சைக்குரிய மருத்துவர்கள், சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள். தற்போது மருத்துவத் துறை நன்கு விருத்தியடைந்துள்ளது.

ஒவ்வொரு மருத்துவ நிபுணருக்கும் குறைந்தது மூன்று மருத்துவர்கள் பணியாற்றினால் மாத்திரமே அந்த பிரிவினை சிறப்பாக செயற்படுத்த முடியும்.

யாழ். போதனா வைத்தியசாலையானது மிகவும் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. தற்போதுள்ள பணிப்பாளரின் அயராத முயற்சியின் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால், மருத்துவப் படிப்பு மட்டுமல்லாது மருத்துவபடிப்பின் பின் பட்டப்படிப்பும், அதேபோல் தாதியப் பயிற்சி போன்ற பல்வேறு துறைகளிலும் யாழ். போதனா வைத்தியசாலை விருத்தியடைந்து வருகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றும்போது சில சேவைகள் இடைநிறுத்தக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமானால் புதிதாக பல மருத்துவர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தனியார் மருத்துவ பீடம் ஒன்றை உருவாக்கும் பட்சத்தில் இந்த குறைபாட்டை நீக்கலாம்.

ஏனென்றால், இன்று மருத்துவம் உலகளாவிய ரீதியில் அதிகளவில் விருத்தியடைந்து காணப்படுகின்றது. ஒவ்வொரு துறையிலும் பல மருத்துவர்கள் உள்ளார்கள். அவர்களின் கீழ் பணி புரிவதற்கும் பல மருத்துவர்கள் தேவை. அதேபோல் மருத்துவ நிபுணர்கள் இளைப்பாறும் போது புதிய மருத்துவ நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

எனவே, எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்கப் போராட்டங்களைக் கைவிட்டு புதிதாக மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும். அரசாங்கத்திடம் போதியளவு பணம் இல்லாததால் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே இந்தக் காலகட்டத்தில் தேவையாக உள்ளது” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More