Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது

நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது

2 minutes read

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பின் சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை, இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், கப்பலில் உள்ள வெப்ப நிலை காரணமாக மீண்டும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளமையால் தொடர்ச்சியாக கப்பலை குளிரூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மீட்பு நடவடிக்கை, பேரழிவு மதிப்பீடு மற்றும் சட்ட ஆலோசனை ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த 10 பிரித்தானிய மற்றும் நெதர்லாந்து வல்லுநர்கள் இன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் அவர்கள் கள ஆய்வுக்காக நியூ டயமன்ட் கப்பல் உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், பேரழிவு மேலாண்மை குறித்து விசாரித்து எதிர்கால நிகழ்வுகள் எவ்வாறு திட்டமிடப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை அவர்கள் வழங்கவுள்ளார்கள்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணியாளர்களுக்கு விபத்துக்குப் பின்னர் முதல் தடவையாக, தங்கள் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளத் தேவையான வசதிகளை வழங்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

தற்போது இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள், இந்திய கடலோர காவல்படையின் ஐந்து கப்பல்கள், இந்திய கடற்படையின் ஒரு போர்க் கப்பல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவின் (Hambanthota International Port Group) இராவணா மற்றும் வசம்ப டக் படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட TTT One டக் படகு மற்றும் ஓசியன் பிலிஷ் (Ocean Bliss) டக் படகு ஆகிய இந்த தீயணைப்பு நடவடிக்கைக்கு ஏற்கனவே தீவிரமாக பங்களிப்பு செய்து வருகின்றன.

மேலும், இலங்கை கடற்படையின் மூன்று துரித தாக்குதல் படகுகள் மற்றும் இலங்கை கடலோர காவல்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் இந்த நடவடிக்கைக்கு விநியோக கப்பல்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஒரு டோர்னியர் விமானம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பாதிக்கப்பட்ட கப்பல் தற்போதுள்ள கடல் பகுதியை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிபுணர்களின் ஆலோசனைகளின் படி மேற்கொள்ளப்படுகின்ற, இந்த கூட்டு பேரழிவு நிவாரண நடவடிக்கை மூலம் கப்பலில் தீ பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதுடன் இந்த கப்பலில் இருந்து கடலுக்கு எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More