நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நுவரெலியா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 5.30 வரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்சரிவு ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் தென்படுமாயின் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.