தமிழ் மக்கள் அபிவிருத்தியினை மட்டும்தான் விரும்புகின்றனர் என கூறியவர்களுக்கு தமிழ்த் தேசியமும் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்த நிலையில்,
தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள விசேட காணொளி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளி பதிவில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “முதலாவதாக இன்று வடக்கு- கிழக்கு வாழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உண்மையிலேயே இன்றைய தினம் எங்களுடைய மக்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பினை பார்க்கின்றபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
எங்களுடைய மக்களுடைய மனங்களில் அந்த உணர்வு தற்போது இன்னும் அதியுச்ச அளவில் இருக்கின்றது என்பதனை இந்த ஹர்த்தாலில் கிடைத்திருக்கின்ற பூரண ஒத்துழைப்பினை பார்க்கின்றபோது புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது.
உண்மையிலேயே கடந்த தேர்தலில் பலர் பலவிதமான கருத்துக்களை சொல்லியிருந்தாலும், உணர்வு அரசியலுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் இனி வடக்கு- கிழக்கில் இடமில்லை.
தமிழ் மக்கள் அபிவிருத்தியினை மட்டும்தான் விரும்புகின்றனர் என சொன்னவர்களுக்கு, இது அவர்களுடைய முகத்தில் சேரு பூசுகின்ற நிகழ்வாகவே நான் பார்க்கின்றேன்.
உண்மையிலேயே இந்த ஹர்த்தாலினை அனுஸ்டித்து, பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமிழனின் உணர்வுதான் முக்கியம், தமிழ்த் தேசியம் முக்கியம், அபிவிருத்தி என்பது மட்டுமல்ல.
தமிழ்த் தேசியத்துடன் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பயணிக்கின்றனர் என்ற ஒரு ஆணித்தரமான செய்தியினை இந்த இடத்தில் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.