கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளை நாளை (திங்கட்கிழமை) விடுவிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, ஆட்டுப்பட்டித் தெரு, மட்டக்குளிய ஆகிய பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தில் ராகம மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளும் நாளை அதிகாலை 5 மணிக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
இதேவேளை, வெல்லம்பிடியபொலிஸ் பிரிவுக்குட்பட்ட, லக்சந்த செவன உத்தேச வீடமைப்பு திட்டம், சாலமுல்ல மற்றும் விஜயபுர கிராம அலுவலகர் பிரிவுகள் ஆகியன நாளை 5 மணி தொடக்கம் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நேற்று மாத்திரம், 487பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 988ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 109பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது