Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா? | விளக்கமளித்த பேஸ்புக்!

தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா? | விளக்கமளித்த பேஸ்புக்!

3 minutes read

ஈழத் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளதா? பிரபாகரன் புகைப்படத்தை வெளியிட்ட பலரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவா? இது தொடர்பில் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழில் உதயன் நாளிதழ் வெளியிட்ட பதிவை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்கிறது வணக்கம் லண்டன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சர்ச்சையாகி வரும் இந்த விவகாரம் தொடர்பாக பிரபல ஊடக நிறுவனமொன்று பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.

இந்த சர்ச்சையின் பின்னணி குறித்தும், அதற்கு பேஸ்புக் நிறுவனம் அளிக்கும் விளக்கத்தையும் இந்த கட்டுரையில் காண்போம்.

மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்க தலைவரான மறைந்த பிரபாகரனின் புகைப்படத்துடன் இடப்பட்ட பதிவுகள், அவரை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளிட்டவற்றையும், இலங்கை உள்நாட்டுப் போர் சார்ந்த சில பதிவுகளையும் பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து நீக்கி வருவதுடன், அவற்றை பதிவிட்டவர்கள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்த நிறுவனம் எடுத்து வருவதாக சில ஆண்டுகளாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து, பலரும் பிரபாகரன் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்தபோது இதே அணுகுமுறையை பேஸ்புக் நிறுவனம் கையாண்டதாக கூறப்படுகிறது.

இதே போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அதிருப்தியை சமீபத்திலும், கடந்த காலங்களிலும் பலரும் பேஸ்புக்கில் வெளிப்படுத்தி வருவதை காண முடிகிறது.

இதுதொடர்பாக குறித்த ஊடக நிறுவனம் நேரடியாக முன்வைத்த கேள்விகளுக்கு பொதுப்படையான பதிலை வழங்கிய பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர்,

“மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும், முக்கியமான கலாசார, சமூக மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் பேஸ்புக்கிற்கு வருவதை நாங்கள் மதிக்கிறோம். எனினும், வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், ஒரு குறிப்பிட்ட இயக்கம் அல்லது தனிப்பட்ட நபர் வன்முறைக்கு வித்திட்டார் என்பதை எதனடிப்படையில் பேஸ்புக் முடிவு செய்கிறது என்ற கேள்விக்கு,

“வெறுப்பை தூண்டும் அமைப்புகளை பட்டியலிடுவதற்கு நாங்கள் ஒரு விரிவான செயல்முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த செயல்முறையைச் செம்மைப்படுத்த உலகெங்கிலும் உள்ள பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்” என்று பேஸ்புக் பதிலளித்துள்ளது.

உதாரணமாக, இனம், மத சார்பு, தேசியம், பாலினம், பாலியல் நாட்டம், கடுமையான நோய் அல்லது இயலாமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுத்த அல்லது நேரடியாக வன்முறையில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் அவற்றின் தலைவர்களை வெறுப்புணர்வை தூண்டும் அல்லது ஆபத்தான இயக்கங்கள்/ தலைவர்களாக வகைப்படுத்துவதாக பேஸ்புக் மேலும் விளக்கம் அளித்துள்ளது.

“ஆபத்தான அமைப்புகளை தடைசெய்யும்போது, அவற்றின் இருப்பை அகற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும், எங்கள் கண்டறிதல் முறைகளிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

வெறுப்புணர்வை தூண்டும் திட்டமிடப்பட்ட செயலுக்கு எதிரான பேஸ்புக்கின் கொள்கையை மீறியதற்காக நீக்கப்படும் பெரும்பாலான உள்ளடக்கங்களுக்கு தாங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் உள்ளடக்க மதிப்பாய்வே காரணம் என்றும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஒரு குழுவை சேர்ந்த பலரை ஒரே நேரத்தில் நீக்குவதற்கான பணியிலும் பேஸ்புக் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறித்த ஊடக நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ளது.

நன்றி – உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More