யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால் முதல்வர் பதவியை இழந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் , அந்தப் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் நாளை தெரிவு இடம்பெறவுள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் இம்மானுவேல் ஆர்னோல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்.
நேற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
நாளை 30 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை கூட்டப்பட்டு முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.