நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 8 பேர் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 240 ஆக உயர்வடைந்துள்ளன.
வெலிகட சிறைச்சாலை கைதியான 52 வயதுடைய ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 06 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா வைரஸ் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜகிரிய பகுதியை சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 7ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா மற்றும் கடும் நீரிழிவு நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்குளி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி மரணித்தார்.
கொரோனா நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 08ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு கொவிட்19 நிமோனியா மற்றும் வலிப்பு நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர் என இனங்காணப்பட்டார்.
அதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பண்டாரகம பகுதியை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் என இனங்காணப்பட்டார்.
அவர், பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அங்கு கடந்த 10 ஆம் திகதி மரணித்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா நிமோனியா மற்றும் கடும் சிறுநீரக நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர், தேசிய தொற்று நோயியல் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்று மற்றும் குருதி விசமானமை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் அவர், வெலிகந்தை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அங்கு நேற்று உயிரிழந்தார்.
அவரது, மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியாவுடன் குருதி விசமானமை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.