ஆங் சான் சூகியின் நிலமை இலங்கையில் உள்ளவர்களுக்கும் வரலாம் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முகநூலில் கூறியுள்ளதாவது,
“முன்னாளில் பர்மா என்றழைக்கப்பட்ட மியன்மார் நாட்டில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி, ஆங் சான் சூகீ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உள்ளே தள்ளி விட்டதாம்.
கடந்த காலத்தில் இந்த ஆங் சான் சூகீயை பல்லாண்டுகள் பர்மிய இராணுவம் வீட்டுக்காவலில் வைத்த போது உலகமே அவருக்காக பரிந்து பேசியது.
இப்போது அத்தகைய பரிவை ஆங் சான் சூகீ எதிர்பார்க்க முடியாது.
காரணம், பெளத்த நாடான மியான்மரில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களை, இதே இராணுவம் படுகொலை செய்தபோது, அதற்கு எதிராக உலகம் அணி திரண்ட போது, அப்போது நோபல் பரிசு பெற்றிருந்த இந்த ஆங் சான் சூகீ என்ற பர்மிய பெண் அரசியல் தலைவர் நியாயம் தவறி தனது நாட்டு இராணுவத்தின் பர்மிய பெளத்த இனமத வெறியை கண்டிக்க தவறியதுடன், ஒடுக்கப்பட்ட அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம்களையே குற்றம் சாட்டினார்.
அவருக்கு நோபல் பரிசு வழங்கி அங்கீகரித்த உலக ஆதரவை, நடுநிலைமை தவறியதால் இவர் இழந்தார் என்றும் சொல்லலாம்.
பர்மாவில் ஜனநாயகம் வீழ்ந்து, இராணுவ சர்வாதிகாரம் மேலோங்குவதை கடுமையாக எதிர்ப்போம். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஆனால், ஆங் சான் சூகீக்காக, “ஆங்.. பாவமே” என முன்ன மாதிரி இப்போ நம்மாள அலற முடியாது. வெரி சொரி..!
இலங்கை என்ற ஸ்ரீலங்காவுக்கும், பர்மா என்ற மியான்மாருக்கும் இடையில் பற்பல ஒற்றுமைகள் உள.
இங்கேயும் இப்படி நடந்தால் உயிரை துச்சமாக கருதி எதிர்ப்போம். ஆனால் எந்த தனி நபருக்கும் பரிவு காட்ட முடியாது. அப்படி பரிவு காட்ட இங்கே தேசிய தலைவனோ, தலைவியோ கிடையாது..!“ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.