கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடைதொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ள நிலையில் சுகாதார துறையினர் இவ்விடயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகெங்கும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் பல நாடுகள் அச்சத்தில் உள்ளது இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார் அதன் பின் மேலும் பலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்ற இத்தொழிற்சாலையில் வெளிமாவட்டங்களில் இருந்தும் பணிக்கு வருகின்ற உயர் பணியாளர்கள் தமது வீடுகளிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆனால் இதுவரையில் இந்த ஆடைதொழிற்சாலையானது சுகாதார நிலையை முறையாக பின்பற்றுகிறதா என்பது கேள்விக்குறியே அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையின் நிமித்தம் வருகை தரும் ஊழியர்கள் பற்றி எவரும் அக்கறைகொள்ளவில்லை இந் நிலையில் வறுமை நிலை கருத்திற்கொண்டு தமது உயிரையும் பொறுட்படுத்தாது பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பாக சுகாதார துறையினர் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றார்.