இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட கொவிட் மரணங்கள் எண்ணிக்கையானது 75 சதவீத அதிகரிப்பை காட்டுவதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கடந்தவாரம்முதல் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் 40 சதவீத அதிகரிப்பும் மரணங்களில் 75 சதவீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கன் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 100 சதவீதம் கடைப்பிடித்து உங்களையும் உங்களை சார்ந்துள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். கொவிட் நோய் அறிகுறிகள் குறித்து அனைவரும் அறிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
நாட்டை எதிர்வரும் 10 நாட்களில் திறக்க முடியுமா என்பது தொடர்பில் பதிலளிக்க முடியாது. பரந்த ஆய்வின் பின்னரே இதற்கான பதிலை அளிக்க முடியும். சுகாதார அமைச்சு இந்த விடயத்தை எவ்வாறு கையாள வேண்டுமென்ற வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
எமது ஆலோசனைகளையும் சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். விஞ்ஞானப்பூர்வமாகவும் ஒரு முறைமையின் கீழும் நாட்டை மீண்டும் திறக்க வர்த்தக சங்கங்கள் விரும்புகின்றன என்றார்.