கொவிட் -19 தொற்று என்பது சாதாரண நோயல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். தொற்றாளர்களின் எண்ணிக்கை, மற்றும் பதிவாகும்மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சரவை இணைப்பேச்சாளர், பெருந்தோட்டத்துதுறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
பலப்பிடிய வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை ‘ பெருந்தொற்று ‘ என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. மருத்துவ துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளினால் கூட வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. ஆகவே கொவிட் -19 தொற்றை சாதாரண நோயென ஒருபோதும் கருத முடியாது. அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
கொவிட் -19 தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கமையவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டு அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையாக்கப்படும். மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுப்பது அவசியமாகுமென்றார்.