தொண்டைமானாறு கரும்பாவளியில் அமைந்திருக்கும் சித்தர் சமாதிகள் அழிவடையும் நிலையில் உள்ளன.
கரும்பாவளிப் பிரதேசம் மரபுரிமைச் சின்னங்கள் உள்ளதும் பாதுகாக்க வேண்டியதுமான பிரதேசம் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
அங்கு 200 ஆண்டுகள் பழமையான கரும்பாவளி கேணி உள்ளது. ஆவுரோஞ்சிக் கற்கள் உள்ளன. சித்தர் சமாதிகள் உள்ளன. பழமையான ஆறன் கிணறும் ஆவுரோஞ்சிக் கல்லும் உள்ளன.
மூலிகைத் தாவரங்கள் உள்ளன. மேய்ச்சல் தரையாக உள்ளது. அருகே தொண்டைமானாறு நன்னீரேரிப் பிரதேசம். இவற்றோடு பழமையான மயானமும் உள்ளது.
இவ்வாறான இடத்தில் பெரிய குப்பைமலையும் உள்ளது. அங்கு குப்பை கொட்ட வேண்டாம் என பிரதேச மக்களும் சமூக ஆர்வலர்களும் வல்வை நகரசபையிடம் கோரி வந்தனர்.
இது தொடர்பாக முறையான கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டபோது முள்ளி மீள்சுழற்சி மையம் இயங்கும் பட்சத்தில் உக்கக்கூடியவற்றை அனுப்புவோம் என தெரிவித்தார்கள். ஆனால் அங்கு கொட்டப்பட்ட பிளாஸ்ரிக் பொலித்தீன் மற்றும் குப்பைகளுக்கு என்ன தீர்வென்று தெரியவில்லை.
நேற்றையதினம் அங்கு சென்று பார்த்தபோது குப்பைகளுக்கு அருகில் தேடுவாரற்று அழிவடையும் நிலையில் உள்ள சமாதிகளைப் பார்த்தோம். பிரதேச மக்கள் முறையிட்டுக் களைத்து விட்டார்கள்.
“யானெவன் செய்கோ?” என்ற குறுந்தொகைச் சங்கப் பாடல்தான் நினைவு வருகிறது.
படங்கள் மற்றும் பதிவு : சு.குணேஸ்வரன்.