திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் 17 வயதுடைய மாணவியை எரியூட்டி கொலை செய்த சந்தேக நபர்கள் இருவரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(15) உத்தரவிட்டார்.
இக்கொலைச் சம்பவம் 10.04.2021 அன்று அதிகாலை 3.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எரியூட்டப்பட்ட மாணவி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 25.04.2021 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த மாணவி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு மூன்றுமாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆலங்கேணியைச் சேர்ந்த 17 வயது மாணவியே எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்களை கிண்ணியா பொலிசார் கைது செய்திருந்தனர்.
இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று(15) எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை 27 ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் 25.10.2021 அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.