எரிபொருள் ஏற்றிய கப்பலில் உள்ள எரிபொருளை இறக்குவதற்கு 36 மில்லியன் டொலர் இல்லை என்பதால், வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 300 மெகா வோட் மின்சாரத்தை இன்று முதல் உற்பத்தி செய்ய முடியாமல் போகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 36 மில்லியன் டொலர் இல்லாத காரணத்தினால், நாட்டு மக்களின் போக்குவரத்து மாத்திரமல்லாது மின்சாரத்தை அரசாங்கம் இல்லாமல் ஆக்கியுள்ளது.
நாடு அடைந்துள்ள பிச்சைக்கார நிலைமை சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் ஆகிய ராஜபக்ச சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டும். மின்சார நெருக்கடி உட்பட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் பாறையை பறித்த பூனையின் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.