இலங்கை இராணுவத்தினை அரசாங்கத்தினால் நம்ப முடியாத நிலை வரும் போது இந்திய இராணுவம் களத்தில் குதிக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக கலாநிதி பிரபாகரன் என அனைவராலும் அறியப்பட்ட இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தென்னிலங்கையின் அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை இராணுவத்தினை நம்ப முடியாத நிலை ஏற்படலாம். இதுவரை காலமும் 90 சதவீதமான சிங்கள இராணுவத்தினை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தி வந்துள்ளார். மற்றுமொரு படையணியினை தனக்கு ஆதரவாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்.
தற்போது இலங்கை படைத்தரப்பினரின் மனநிலை தங்களது குடும்பத்தின் நலன் சார்ந்தே காணப்படுகின்றது.எனவே தான் நாளுக்கு நாள் தொடரும் போராட்டங்களின் போதும் இராணுவத்தினர் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டங்கள் உச்சமடைந்து மக்கள் கிளர்ச்சியாக மாறும் பட்சத்தில் இலங்கை இராணுவத்தினதும்,அரசாங்கத்தினதும் கையை மீறும் போது இந்திய இராணுவம் களத்தில் குதிப்பதினை தவிர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.