இலங்கை பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பிற்கு அமைவாகவே செயற்படுவதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் அதிகாரிகளை நேற்று(04) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் சந்தித்த இராணுவத் தளபதி நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
தொழில்சார் திறமைகளை கொண்டுள்ள இலங்கையின் முப்படையினர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டின் பாதுகாப்பிற்காக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் தூதரகங்களைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்துகொண்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.