உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டும் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வில்லை. எனவே தமது அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதனை உறுதி செய்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எழுத்து மூலமாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலையில் கூடியது. இதன்போது சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடையில் அமர்ந்திருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 3 ஆவது வருடத்தை நினைவு கூர்ந்து, தாக்குதலில் மரணித்தவர்களின் குடுபத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலே இவ்வாறு கறுப்பு நிற ஆடையில் வந்திருந்தனர்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, அதுதொடர்பான எழுத்து மூல உறுதிமொழியை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக இதன்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு அறிவித்தார்.