நாட்டில் தற்போது அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ள நிலையில், சமீபத்தில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய விலையை அதிகரிப்பதா அல்லது பேக்கரிகளின் விருப்பத்திற்கு இணங்க தங்கள் செலவுகளை ஈடுகட்ட விலையை அனுமதிப்பதா என்ற குழப்பத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில்,
நாட்டில் சிற்றுண்டி (கேன்டீன்) தொழில் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் உணவை பெறுவதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்கள் உணவை பெறுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே, இந்நிலைமைக்கு மாற்று வழிகளை தேட வேண்டும். மேலும் தற்போது சிற்றுண்டி சாலைகளில் எரிவாயு மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறியுள்ளது.
எரிவாயு விலையை உயர்த்தினால், சாதாரண டீ, அடிப்படை சிற்றுண்டிகளின் விலை முதல் மதிய உணவுப் பொதிகளின் விலை வரை பாதிக்கப்படும்.
எனவே, எரிவாயு தொழில்துறை தலைவர் மற்றும் இயக்குநர் குழு உட்பட அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நபர்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்களை 75 சதவீதத்தினால் குறைக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுபவர்களுக்கு எதிராக விரைவில் பாரிய போராட்டத்தை ஏற்பாடு செய்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.