Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை

2 minutes read

இந்தியாவிடமிருந்து அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று உலகவங்கியின் நிதியுதவியில் ஒருபகுதி மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் வாரமளவில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலை ஒப்பீட்டளவில் குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் உள்ளடங்கலாக ப்ரஸ் கிளப்பினால் ‘நாட்டின் பொருளாதார நிலையும் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளும்’ என்ற தலைப்பில் திங்கட்கிழமை (23) கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்று நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதிவழங்கல் கட்டமைப்புக்களுடனான பேச்சுவார்த்தைகள், அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்குத் தீர்வுகாண்பதற்குரிய முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போது எமது நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. குறிப்பாக அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்தல் உள்ளடங்கலாக நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான வெளிநாட்டு நாணயத்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது.

நான் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்றவுடன் வெளிநாட்டுக்கையிருப்பு மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதை அறிந்துகொண்டேன். அதன் காரணமாக கடன்களை மீளச்செலுத்தமுடியாத முறிவடைந்த நிலையேற்படுவதைத் தடுப்பதற்காகக் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டோம்.

அதன்மூலம் எமது நிலையை வெளிநாட்டுக்கடன் வழங்குனர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், கடன் மீள்செலுத்துகை தொடர்பில் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், கடன் மறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை சர்வதேச நாணயத்துடனான தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் நாளைய தினம் (இன்று) முடிவிற்குக்கொண்டுவரப்படவுள்ள நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகின்றோம்.

3, 4 மாதங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தால் 3 மாதகாலத்திற்குள் உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கமுடியும்.

ஆனால் வெளிநாட்டுக்கையிருப்பு வெகுவாக வீழ்ச்சிகண்டதன் பின்னர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டமையால், சர்வதேச நாணய நிதியம் அத்தகைய நாட்டிற்கு நிதியுதவிகளை வழங்க முன்வராது.

எனவே இப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவசியமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 4 – 6 மாதகாலமாகும்.

இது இவ்வாறிருக்க உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகிய கட்டமைப்புக்களிடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் இந்தியா, சீனா போன்ற பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத நாடுகள் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அடுத்ததாக இந்தியாவிடமிருந்து அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று உலகவங்கியின் நிதியுதவியில் ஒருபகுதி மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் வாரமளவில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலை ஒப்பீட்டளவில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More