சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஆளும் தரப்பின் முக்கிய தரப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் பிரதான எதிர்க்கட்சிகள் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தேசிய அரசாங்கம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் போது சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சர்வக்கட்சி நிர்வாகம் என்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் செயற்திட்டம் மற்றும் பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை ஜனாதிபதி முன்வைக்கவில்லை. மாறாக அவர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலினை செயற்படுத்துகிறார் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வககட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிக்காவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்துங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உட்பட அவர் தலைமையிலான பொதுஜன பெரமுன பொறுப்புக்கூற வேண்டும்.
சர்வக்கட்சி அரசாங்கத்திலும் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கம் காணப்படும். மக்களால் வெறுக்கப்படும் தரப்பினருடன் ஒன்றிணை முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தரப்பினர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.
சர்வக்கட்சி அரசாங்கம் முறையான கொள்கை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டிய ராஜபக்ஷர்களை ஒன்றிணைத்து அமைக்கும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணை முடியாது.
ராஜபக்ஷர்களை மீண்டும் பலப்படுத்தும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைபோவதில்லை என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 43ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுடன் ஒன்றிணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.
தற்போதைய பாராளுமன்றத்திற்கும், நாட்டு மக்களுக்குமிடையில் பாரியதொரு வேறுப்பாடு காணப்படுகிறது. மக்களின் நம்பிக்கையில்லாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
ஆகவே மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய பாராளுமன்றத்தை கலைத்து உடன் பொதுத்தேர்தலுக்கு செல்லுங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்த சிறிய அமைச்சரவை மற்றும் பொது செயற்திட்டத்தை அமைத்தல் ஆகிய யோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் பொதுத்தேர்தலை நடத்தும் வரை பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லுமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பிரதான தடையாகவுள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கொண்டு செல்லவே முயற்சிக்கிறார்.
ஜனாதிபதியும் பஷில் ராஜபக்ஷவின் தேவைக்கேற்ப தனது பதவியை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் செயற்படுகிறார்.ஆகவே சர்வக்கட்சி அரசாங்கம் என்பது சாத்தியமற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்குமாறு ஆளும் தரப்பின் முக்கிய தரப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.