முல்லைத்தீவு நகரில் இன்று (22.09.2022) காலை கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரவிகரன், மயூரன் கைது
வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோரை நேற்று (21.09.2022) மாலை முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்த பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த பின்னர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தினரால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டன போராட்டம்
இந்த நிலையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த கட்டுமானங்கள் இடம்பெறுவதற்கு எதிராகவும், ஜனநாயக வழியில் போராட்டம் மேற்கொண்டவர்களை கைது செய்த பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்தும் இன்றைய தினம் முல்லைத்தீவு நகரில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் – கீதன்