ஏனைய அரச உத்தியோகத்தர்களைப் போலவே வைத்தியர்களும் 60 வயதில் ஓய்வு அளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் சிறந்த தீர்மானம் எனவும் இளம் வைத்தியர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக அமையும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்தார்.
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் என சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரம் தவறானது எனவும் நாட்டில் திறமையான இளம் வைத்தியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“சுமார் 200 வைத்தியர்கள் அரசாங்கத்தின் இந்த ஓய்வு முடிவை ஆதரித்து கடிதம் அனுப்பி உள்ளதுடன், நாட்டில் விசேட நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது.
கொழும்பு, காலி, கண்டி போன்ற பகுதிகளில் பணிபுரியும் சில விசேட வைத்தியர்கள் அந்த பகுதிகளை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருவதுடன், ஓய்வு பெறும் வயது எல்லையை 63 ஆக உயர்த்துமாறு கோரி வருகின்றனர். அவர்களது இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்கக்கூடாது” என்றார்.