குருந்தூர்மலை தொடர்பாக வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.06.2022 அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.
இந் நிலையில் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் கடந்த 22.09.2022 அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றபோது, நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையானது மீறப்பட்டதாகவும், அவ்வாறு மீறப்பட்டதாலேயே கடந்த 21.09.2022 அன்று தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதாகவும், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகள் புகைப்பட ஆதாரங்களையும் நீதி மன்றிலே சமர்ப்பித்தனர்.
அதனடிப்படையில் அவ்வாறு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பில் பொலீசார் மற்றும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் ஒக்ரோபர் 13ஆம் திகதி மன்றில் தோன்றி விளக்கமளிக்கவேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்தவகையில் நீதிமன்றின் உத்தரவை ஏற்று 13.10.2022 இன்று தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் அனுர மானதுங்க நீதிமன்றில் முன்னிலையானதுடன், தொல்லியல் திணைக்களம் சார்பில் சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் உள்ளிட்ட சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.
அத்தோடுபொலிசார் மற்றும், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றதுடன், இரு தரப்பினரும் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
அந்தவகையில் இருதரப்பு சமர்ப்பங்களையும் நன்கு செவிமடுத்ந நீதிதவான், இதுதொடர்பில் கட்டளையொன்றினை வழங்குவதற்காக எதிர்வரும் 27.10.2022 ஆம் திகதிக்கு குறித்த வழக்கினைத் திகதியிட்டுள்ளார்.
மேலும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் நீதிமன்றிற்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.