யாழ்., வலிகாமம் வடக்கில் பாதுகாப்புத் தரப்பின் ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தெல்லிப்பழையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், மதகுருமார்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தப் பேராட்டத்துக்கான முன் ஏற்பாடாக இன்று காலை 8 மணிக்கு யாழ். பல்கலைக்கழக முன்றலில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் ஒன்றுகூடி, வாகனப் பேரணியாக தெல்லிப்பழை சந்தி நோக்கிப் புறப்பட்டனர்.
“வலிகாமம் வடக்கு எமது பூர்வீக இடம்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “அரச படைகளே உடன் வெளியேறுங்கள்” போன்ற கோஷங்களுடன் காலை 10 மணியளவில் தெல்லிப்பழை சந்தியிலிருந்து ஆரம்பமான கண்டனப் பேரணி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை நோக்கி நகர்ந்தது.
பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், திடீரெனப் பிரதேச செயலகத்துக்குள் நுழைந்தனர்.
இதன்போது காணி அமைச்சினுடைய மேலதிக செயலாளர், 1674 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பதற்கு உத்தரவு இட்டு தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்தார் எனக் கூறப்படும் கடிதம் தீயிட்டு எரிக்கப்பட்டது.
இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டது.