மின்சாரத்தை தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒரு அலகிற்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும்.
தற்போதைய கட்டணத்தின் அடிப்படையில் ஒரு அலகிற்கு சராசரியாக ரூ.29.14 வசூலிக்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
423.5 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தரவுகளின்படி, 6,709,574 பேர் இலங்கை மின்சார சபையின் நுகர்வோராக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர்களில், 1,460,828 நுகர்வோர் ஒரு மாதத்திற்கு பூஜ்ஜியத்திலிருந்து 30 அலகு வரை பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒரு அலகுக்கு ரூ.8 மாத்திரமே செலுத்துகின்றனர்.
மேலும், 1,683,172 நுகர்வோர் ஒரு மாதத்திற்கு 30 முதல் 60 அலகுகளை பயன்படுத்துகின்றனர், தற்போது அவர்கள் ஒரு அலகுக்கு ரூ.10 மாத்திரமே செலுத்துகின்றனர்.
மேலும் இலங்கை மின்சார சபையில் உள்ள 1,702,515 நுகர்வோர் உள்ளனர், அவர்கள் ஒரு மாதத்திற்கு 60 முதல் 90 அலகுகள் வரை பயன்படுத்துகின்றனர் மற்றும் அவர்கள் ஒரு அலகுக்கு ரூ.16 மாத்திரமே செலுத்துகின்றனர்.
சராசரியாக 1,559,131 நுகர்வோர் மாதாந்தம் 90 முதல் 180 அலகுகளை உபயோகிப்பதாகவும் ஒரு அலகுக்கு 50 ரூபா செலுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபையில் சுமார் 303,928 நுகர்வோர் உள்ளனர், அவர்கள் 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள், அதற்காக அவர்கள் ஒரு அலகுக்கு ரூ.75 செலுத்துகிறார்கள்.
எனவே உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மின்சாரத்திற்கு சராசரி விலைக்கு மேல் செலுத்தும் அதேவேளையில், குறைந்த பிரிவினருக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மானியத்துடன் கூடிய மின்சார விநியோகத்திற்கான எஞ்சிய நிதி திறைசேரியினால் ஏற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது தனிப்பட்ட கருத்துப்படி, ஒவ்வொரு மின்சார வாடிக்கையாளரும் ஒரு அலகுக்கு ரூ. 56.90 செலுத்த வேண்டும், அதே நேரத்தில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு நேரடி பண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.