யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடம், யாழ் குடா நாட்டிற்குள் முடங்கியிருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள மருத்துவர் சிவரதன், அதனைத் தாண்டி கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் என வட மாகாணம் முழுவதும் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளி பீப்பிள் அமைப்பின் வெளியீடான தாயாகிய தனித்தவம் நூல் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் யாழ் மாவட்டத்திற்குள் முடங்கி இருப்பதாக தோன்றுவதாகவும் கூறினார். போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலேயே மருத்துவ பீடத்தின் சேவைகளும் ஆய்வுகளும் அவசியமாக உள்ளது“ என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறு அவர் கருத்து தெரிவித்த வேளையில், நூல் வெளியீட்டு அரங்கில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியில் பீட பீடாதிபதி கே. பிரபாகரன், நூலாசிரியர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் வைத்தியக் கலாநிதி கந்தையா குருபரன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
மேற்படி கோரிக்கையை முன்வைத்த மருத்துவரின் ஆதங்கத்திற்கு செவிமடுப்பது, வடக்கு கிழக்கு மக்களின் ஆதங்கத்திற்கு செவிமடுப்பதாகும். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம், தனது மருத்துவம் சார்ந்த பணிகளையும் ஆய்வுகளையும் களங்களையும் இனிவரும் காலத்தில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கவனம் செலுத்தும் என்று வணக்கம் இலண்டன் நம்புகிறது.
வணக்கம் இலண்டன் விசேட நிரூபர்