Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நம்பிக்கையோடு பேச்சை எதிர்கொள்வோம்! – காரைதீவில் சுமந்திரன்

நம்பிக்கையோடு பேச்சை எதிர்கொள்வோம்! – காரைதீவில் சுமந்திரன்

3 minutes read

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சில் நாங்கள் தொடர்ந்து பங்கேற்போம். நம்பிக்கையோடு பேச்சை எதிர்கொள்வோம். அந்தப் பேச்சில் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்துவோம்.”

– இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார் .

அங்கு சுமந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்.

“இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவிதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதை நாங்கள் சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.

அரசுடன் பேசாமல் எதுவும் செய்ய முடியாது. அங்கு நமது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு பற்றி தெளிவாக எடுத்துரைப்போம்.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சரித்திரமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு தரப்பட வேண்டும்.

இதுவே எமது தெளிவான – தீர்க்கமான முடிவாக இருக்கின்றது. இதனை நாங்கள் ஜாதிபதியிடம் நிச்சயம் தெளிவுபடுத்த இருக்கின்றோம். ரணிலை நம்புவதா?நம்பாமல் விடுவதா? என்பதெல்லாம் இப்போது பிரச்சனை அல்ல.

எமது தீர்வைப் பேச்சு மேசையில் நாங்கள் சொல்ல வேண்டும். அதற்கு அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதுதான் இப்போது பிரச்சினை.

கடும் சிங்கள தேசியவாதம் உருவாகின்ற பௌத்த சம்மேளனம் போன்ற அரங்குகளில் நாங்கள் சமஷ்டி பற்றி பேசி இருக்கின்றோம். அவர்கள் அதை மௌனமாக ஏற்றுக்கொண்டார்கள் .

இந்த நாட்டிலே தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. தேர்தல் இன்றி எந்த ஆட்சி மாற்றமும் இதுவரை இடம்பெறவில்லை . ஆனால், அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் இன்று ஆட்சி மாற்றம் சரித்திரத்தில் இடம்பெற்றது. ஆம் அசைக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு மேல் இருந்த கோட்டா முதல் மொட்டு அரசு வரை கவிழ்த்து விட்டது.

1960 களில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. அது கைவிடவில்லை. 1971களில் ஜே.வி.பி. புரட்சி ஏற்பட்டது. அதுவும் கைகூடவில்லை.1988 களில் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். அதுவும் கைகூடவில்லை. இடையிலே எமது இளைஞர்கள் பெருநிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் சில தசாப்தங்கள் வைத்திருந்து போராடினார்கள். அதுவும் கைகூடவில்லை.

ஆனால், இந்த வருட நடுப்பகுதியில் கொழும்பிலே இடம்பெற்ற போராட்டம் என்பது பல வெற்றிகளைத் தந்து இருக்கின்றது .

2009 நவம்பரில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வந்த ஜனாதிபதி கோட்டபாய நாட்டைவிட்டு விரட்டி அடிக்கப்பட்டார். அதன் பின்பு அந்தப் பொதுத்தேர்தலிலே 68 இலட்சம் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை அரசை அமைத்த அந்த அரசும் கவிழ்ந்தது. ஆகவே, அந்தப் போராட்டத்தை நாங்கள் சாதாரணமாக நோக்கக்கூடாது. இது ஒரு பாடம்.

இலங்கைக்குத் தேர்தல் மூலமாக இல்லாமல் ஒரு போராட்டம் மூலமாக ஆட்சி அமைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

நான் நாடாளுமன்றத்தில் இப்போது சமஷ்டி பற்றி பேசுகின்றேன். யாரும் வாய்திறப்பதில்லை. அன்று சமஷ்டி என்றால் அவர்களுக்கு க் கசத்தது. கூக்குரலிடுவார்கள். ஆனால், இன்று அதைக் கூறுகின்ற போது அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களோ, இல்லையோ ஒரு மௌனத்தோடு கவனிக்கின்றார்கள். அவர்கள் மத்தியிலும் அந்த மாற்றம் தென்படுகின்றது. எனவே, நம்பிக்கையோடு பேச்சை நாங்கள் எதிர்கொள்வோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More