வடக்கில் போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வட மாகாண விவசாய அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச கால்நடை வைத்தியர் எனும் பெயரில் போலியான நபர்கள் கால்நடைகளுக்கும் வீட்டுப் பிராணிகளுக்கும் சட்டவிரோதமான முறையில் சிகிச்சைகளை மேற்கொண்டு, பெருமளவு நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களால் மேற்கொள்ளப்படும் தவறான சிகிச்சைகளால் பெறுமதி மிக்க கால்நடைகள் அதிகளவில் இறந்துள்ளதாக அந்த மாவட்டங்களின் பண்ணையாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கும், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாவட்ட அலுவலகங்களுக்கும் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
எனவே, போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
குறித்த போலி நபர்களால் ஏமாற்றப்பட்டு ஏற்கனவே தமது கால்நடைகளையும் நிதியையும் இழந்தவர்களும், தற்போது அவ்வாறான போலி வைத்தியர்கள் பற்றிய தகவல்களை அறிந்தவர்களும் அவர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சு, இல: 655, நாவலர் வீதி என்கிற முகவரி மூலம் தொடர்புகொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.