காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள், “ராஜபக்ச குடும்பம் பேரக் குழந்தைகளைக் கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக்குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகின்றோம்”, “கூட்டமைப்பே நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே!”, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்”, “ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத் தா”, “வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு” எனக் கோஷங்களையும் எழுப்பினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்கள், “காணாமல் ஆக்கப்பட்டோரை விடுதலைப்புலிகள் கொண்டு சென்றிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும், வைத்தியசாலையில் இருந்தும், வீடுகளில் இருந்தும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம். அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்குச் செல்லாது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காகச் செயற்பட வேண்டும்” – என்றனர்.