யாழ்ப்பாணத்தில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகி சுகவீனமுற்றிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் நான்கு மாதங்களுக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 6) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் எனும் 52 வயதுடைய மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த செப்டெம்பர் 9ஆம் திகதி பண்ணை பகுதியில் இறால் பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அதனையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் 20 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றுவந்ததன் பின்னர், வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், அவர் மீனின் தாக்குதலால் ஏற்பட்ட சுகவீனத்திலிருந்து பூரணமாக குணமடையவில்லை. அதன் பின்னர் வீட்டில் ஓய்வெடுத்துவந்த போதிலும், அவ்வப்போது திடீர் சுகவீனமுற்று அவதிப்பட்டுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே நேற்றைய தினம் திடீர் சுகவீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.