குடும்ப உறவுகள் நெருக்கம்தான் இன்றைய போதைப் பாவனையில் இருந்து பிள்ளைகளை மீட்டெடுக்கும் என்று யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சமூகவியல் பேராசிரியர் என் சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நடைபெற்ற பரிசில் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு குறிப்பிடுகையில்,
போதைப் பொருள் பாவனையைப் போலவே கைதொலைப் பேசிப் பாவனையும் இன்றைய சமூகத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்றும் பெற்றோர்கள்தான் அதனை தடுக்க முடியும் என்றும் கூறினார்.
எந்தப் பிள்ளையும் எதனையும் செய்துவிட்டு இறுதியில் வீடு திரும்புகின்ற நிலையில் தாயும் இதர குடும்ப உறவுகளும் அந்தப் பிள்ளையை கண்காணிக்கவும் திருத்தவும் தொடங்கும் போது தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
குடும்ப நெருக்கம் இருந்தால் பிள்ளைகளை பாதிக்கும் தவறான எவரும் உள் நுழைய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குடும்பங்களோ, பாடசாலைகளோ, சமூகமோ பிள்ளைகளை குற்றம் சுமத்துவதை விடுத்து பிள்ளைகளை அரவணைப்பதன் மூலமே இந்தப் பிள்ளைகளை பாதிப்பிலிருந்து நாம் காக்க முடியும் என்றார்.
இதேவேளை பிள்ளை படிக்க மாட்டான் என்ற தீர்மானத்தை ஒருபோதும் ஆசிரியர்கள் எடுக்கக்கூடாது என்றும் இந்தியக் கவிஞர் ரவிந்திரநாத் தாககூர் சொன்னதைப் போல எல்லாப் ஏதோ ஒரு பிள்ளைகளும் ஏதோ ஒரு கலையை பயில வேண்டும். அதனால் அவர்களின் மனம் அழகாகும் . அதனால் பிழையான வழிகளில் பிள்ளைகளில் செல்ல மாட்டார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.
இதேவேளை பிரதம விருந்தினரின் உரையைக் கேட்ட மாணவர்கள் பெரும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். மிகவும் சிறப்பான முறையில் பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டமை நெகிழ்வளிப்பதாகவும் முன்னாள் துணைவேந்தர் குறிப்பிட்டார்.
குடும்பம், பாடசாலை, சமூகம் என அனைத்தும் இசைவான முறையில் புரிந்துணர்வுடன் நெருக்கமாக செயல்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் திருமதி சூரியகுமாரி இராசேந்திரம் தலைமையில் பாடசாலை திறந்தவெளி அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கள் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக யாழ் யூனியன் கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதனும் சிறப்பு விருந்தினராக வீட்மைப்பு அதிகாரசபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் இராசநாயகம் மோர்சிபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், சிறந்த வரவொழுங்கு கொண்ட மாணவர்களை கௌரவித்தல் போன்ற நிகழ்வுகளுடன் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள் மற்றும் மாவட்ட, தேசிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவங்கள் என்பன நிகழ்வில் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கண்கவர் ஆற்றுகைகளுடன் இடம்பெற்ற நிகழ்வில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.