Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்தாலே சகலருக்கும் பயன்”

“தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்தாலே சகலருக்கும் பயன்”

2 minutes read

“தேர்தல் நடத்தப்பட வேண்டும்; ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதேவேளை, நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுடையதாகவும் அமைய வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலு குமார் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரசுக்கும் இடையில் அதிகார மோதலை ஏற்படுத்தி இருக்கின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தாலும், அதன் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

குறைந்த பட்சம் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் நடைபெறுமா? இல்லையா? என்பதை கூட அறிவிக்க முடியாத நிலையே தென்படுகின்றது.

தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல் நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும்.

இன்று தேர்தலை முன்னெடுக்க போதிய பணம் இல்லை என அரசு கூறுகின்றது. அதேபோன்று நடைபெறவுள்ள தேர்தலில் எண்ணாயிரத்திற்கு அதிகமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அவர்களுக்கான கொடுப்பனவை செய்வது மிகப்பெரிய செலவை நாட்டுக்கு ஏற்படுத்துகின்றது. அத்தகையதொரு செலவினம் தேவையற்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதிலும் யதார்த்தபூர்வமான உண்மை உள்ளது.

அவ்வாறாயின் இப்போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கு காலத்திற்கு பொருத்தமான தீர்வை முன்வைக்க வேண்டும். அதனை விட்டு தேர்தலை அறிவித்து, நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலை ஒன்றை ஏற்படுத்தி, மக்களிடையில் சுமுகமற்ற நிலை தோன்றுவதற்கு வழிவகுப்பது பொருத்தமானதல்ல.

இன்றைய சூழ்நிலையில் கிடைத்திருக்கக் கூடிய கால அவகாசத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மீண்டும் விகிதாசார முறை தேர்தலுக்கு செல்ல முடியும். அதன் போது உடனடியான எல்லை நிர்ணய பிரச்சினை எழாது.

உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டுக்குள் வரும். இதனை மிக இலகுவாக செய்ய முடியும். நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையினர் இம்முறைமைக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

எனினும் ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்தை நிலைநிறுத்திக் கொள்ளும், வறட்டுத்தனமான கௌரவ பிரச்சினையே இதற்குத் தடையாக உள்ளது.

இப்போதாவது இவர்கள் திருந்தி, நாட்டுக்கும் வீட்டுக்கும் பிரயோசனமான ஒன்றை செய்வதற்கு ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது இந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும், மேலும் பல ஆண்டுகளுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்வதாகவே அமையும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More