பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமடைந்துள்ளன. இதனால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும்.
எனவே, சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
மட்டக்குளி புனித ஜோன் மகா வித்தியாலயத்தில் இன்று (13) திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இரு வாரங்கள் கால தாமதமடைந்துள்ளன.
இது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் பிரதானமானது வரி தொடர்பானதாகும்.
இது தொடர்பில் நாம் நிதி அமைச்சுக்கு அறிவித்திருக்கின்றோம்.
இதேபோன்று அவர்களின் ஏனைய நிபந்தனைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின்போது வழங்கப்படும் கொடுப்பனவை இரு மடங்காக அதிகரித்து, அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதோடு, உரிய தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலம் கருதி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை விரைவில் ஆரம்பிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கால தாமதமடைந்துள்ளமையால், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதிலும் கால தாமதம் ஏற்படும்.
இதன் காரணமாக குறிப்பிட்ட காலத்துக்கு சாதாரண பரீட்சைகளும் தாமதமடையும்.
பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மக்களின் உரிமை மீறப்படுகிறது. இது தொடர்பில் எவரும் கருத்துக்களை வெளியிடுவதில்லை.
மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள் அனைத்தும் முன்னதாக மாணவர்களின் உரிமை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.