ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.
கியூபாவில் நடைபெற்ற “ஜி77 + சீனா” அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.
“2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் செப்டம்பர் 18 முதல் 21 வரை இம்முறை கூட்டத்தொடர் நடைபெறும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கூட்டத்தொடரில் பங்கேற்று, தனது விசேட உரையை ஆற்ற உள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள, 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
மேலும், அன்று ஜனாதிபதி, உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் அபிவிருத்திக்கான நிதியளித்தல் தொடர்பான உயர்மட்ட கூட்டத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.
கடன் நிலைத்தன்மையை வளர்த்தல் மற்றும் உலகளாவிய நிதி பாதுகாப்பு இணைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை இதன்போது ஜனாதிபதி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜனாதிபதியின் விஜயம் இராஜதந்திர ஈடுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சந்திப்புகளையும் உள்ளடக்கியதாகவே உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள் குறித்த வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்துகொள்ளவுள்ளதுடன், நியூயோர்க் நகரை தளமாக கொண்டு இயங்கும் சசகாவா அறக்கட்டளை நிலையம் ஏற்பாடு செய்யும் 3வது வருடாந்திர இந்தோ – பசிபிக் தீவுகள் உரையாடலிலும் ஜனாதிபதி ரணில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.