யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்வையாளர் நேரம் அல்லாத நேரத்தில் மூவரும் பார்வையிடச் செல்ல முற்பட்ட வேளையில், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை.
அதனால் மூவரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு, வைத்தியசாலைக்கு அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.
கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.