இந்தோனேசியாவின் Lhokseumawe முகாமில் சுமார் 400 ரோஹிங்கியா அகதிகள் தங்கியிருந்த நிலையில், தற்போது வெறும் 112 அகதிகள் எஞ்சியிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், முகாமிலிருந்து காணாமல் போன அகதிகள் மலேசியாவுக்கு கடத்தப்பட்டிருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகின்றது.
“அவர்கள் எங்கே போனார்கள் என எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதேனும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவர்கள் தப்பியிருக்கக்கூடும். அதுவே அவர்களது இலக்கு,” எனக் கூறியிருக்கிறார் ரோஹிங்கியா பணிக்குழுவின் Ridwan Jalil.
இந்த சூழலினால், இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்கு நோக்கி வரும் படகுகளையும்/கப்பல்களையும் மலேசிய கடல்சார் அமலாக்க முகமை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவில் தஞ்சமடையக்கூடும் என்ற சந்தேகத்தை அடுத்து இக்கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே சமயம், Lhokseumawe முகாமில் இருந்த 18 ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியாவின் Medan நகரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவை சென்றைடைவதற்கான வழக்கமான சட்டவிரோத வழித்தடம் அருகே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.