13 பிப்ரவரி / புது தில்லி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்து அமலாக்க இயக்குநரகம் தவறான செய்திகளை அதன் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாக பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அணீஸ் அகமது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அமலாக்க துறையானது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நலன்களுக்காக சேவை செய்யும் அமைப்பாக மாறி வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,
அமலாக்க இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பண மோசடி தடுப்புச் சட்டம் 2002 (PMLA) இன் விதிகளின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது லக்னோவின் சிறப்பு பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கிறது. அந்த செய்திக் குறிப்பின் விபரங்களைப் படித்தவுடன், எங்கள் அமைப்பு பற்றி ஊடகங்களையும் சமூகத்தையும் தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகிறது. கடந்த பல மாதங்களாக அமலாக்கத்துறை பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை விசாரித்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இருந்த போதும், முற்றிலும் தவறான கூற்றுகள் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.
பிற அமைப்புகளின் உறுப்பினர்கள் / நிர்வாகிகள் பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இது தவறுதலாக நடந்த விடயம் அல்ல. வெளிப்படையான விசாரணைகள் மூலம் தனது வழக்கை நிரூபிப்பதற்குப் பதிலாக, கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட்டு ஹத்ராஸில் சாதி வன்முறையைத் தூண்டுவது போன்ற போலியான மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையில், வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் பெயரை அமலாக்கத்துறை தொடர்ந்து இழுக்கப் பார்க்கிறது.
அமலாக்கத்துறை இயக்குநரகம் ஒரு விசாரணை நிறுவனமாக பூஜ்ஜிய நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் மீது அவதூறு பிரச்சாரம் செய்ய பாஜக தலைமையிலான மத்திய அரசால் அமலாக்கத் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டை குறிவைக்கும் அமலாக்கத்துறையின் இந்த அணுகுமுறை ஆர்எஸ்எஸ்-ன் நலனுக்கு சேவை செய்வதை நிரூபிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.