வணிக மயமாக்கலும் தனியார் கல்வி நிலையப் போட்டிகள்… கிளிநொச்சி மாவட்டம் போர்த் தழும்புகள் மறைந்து இப்பொழுதுதான் தன்னைக் கல்வியால் உயர்த்தியும் வளர்த்தும் வருகிறது…
எனினும் க.பொ.த சாதாரண தரத்தில் மாவட்ட நிலையில் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் கடைசி மாவட்டமாகவே அதன் பெறுபேறு 2019 வரை அமைந்துள்ளது. ஆனாலும் கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையங்களின் அலப்பறைகள் அழும்புகள் தாங்க முடியவில்லை என பலரும் முகம் சுழிக்கின்றனர்.
கடந்த 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 20 ஆம் இடத்திலிருந்து 8 ஆம் இடத்திற்கு முன்னேறிய எமது மாவட்டம் உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பிரிவுகளில் இன்னும் மேலெழவில்லை.
இது இவ்வாறிருக்க, கிளிநொச்சி மாவட்டத்தின் புகழ் பூத்த தனியார் கல்வி நிலையங்கள் ஒன்றை ஒன்று துரத்தித் துரத்திக் கடிக்கும் ஊர் நாய்கள் போல இராத்திரி வேளைகளில் வீதிகளில் சத்தமிட்டுத் திரிவதை சாதாரண தரப் பரீட்சை முடிந்த பின்னரான தற்போதைய நாட்களில் காணக்கூடியதாக உள்ளது. முன்னை நாள் உள்ளூராட்சி உறுப்பினரின் கல்வி நிலைய உரிமையாளர் இரவு நேரங்களில் மதுப்பாவனையோடு கூடிய சிலருடன் திரிந்து விளம்பரப் பதாகைகளை ஒட்டி போலிசாரிடம் முறைப்பாடு நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அதுபோல புகையிர நிலையத்திற்கு முன்னால் இயங்கும் கல்வி நிலைய நிர்வாகியும் அதன் புவியியல் பாட ஆசிரியரும் மனஸ்தாபத்தால் பிரிந்து சென்று தனியாகக் ரியூசன் கொலிச் ஒன்றை நிறுவ இருவருக்கும் தொழிற் போட்டி அதிகரிக்க முன்னைய முதலாளி கத்தி அரிவாள் செயின் சகிதம் புதிய நிர்வாகியிடம் அவரது வீட்டிற்கே சென்று வம்பிழித்து அது போலிஸ் நிலையம் வரை சென்றமையும் அந்த வழக்கும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த நிர்வாகி பிற ஆசிரியர்களுக்கும் இரவு வேளைகளில் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு அதட்டுவதும் பயமுறுத்த முனைவதும் மற்றுமொரு வழக்காக போலிசிடம் பதிவாகியுள்ளது.
இவர் ஏற்கனவே தன்னை ஒரு உள்ளூராட்சி உறுப்பினர் என்று பொய் அடையாளம் காட்டி உதய நகரில் தர்ம அடி வாங்கியதை மறக்கவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றமை சிரிப்பிற்கிடமானதாகும்.. போதைப் பொருள் பாவனையாளரான இவர் ஆசிரியரல்லாத உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அண்மையில் அரச பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட காலணி வவுச்சர்களைத் தனது கல்வி நிலையத்தில் வழங்கியதாக அந்த உத்தியோகத்தர் தனது முகனூலில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வர்த்தகப் பிரிவில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் முன்னணிக் கல்வி நிலையத்திற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இன்னுமொரு கல்வி நிலையப் பதாகைகள் அடித்து உடைக்கப்படுவதும் குற்றச் சாட்டாகப் பதிவாகியுள்ளதெனப் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர் செய்தியளித்துள்ளார். இவர்கள் அனைவரும் கல்வியை வணிக நோக்கில் அணுகுகிறார்களே தவிர எதிர்கால நலன் கருதி மாணவர் நலன் சார்ந்து யோசிக்ககை என்பதே உண்மையாகும்.
அவர்களின் தனிப்பட்ட முக நூல்களில் செய்யும் விளம்பரங்களே இதற்குச் சான்றாகும். கிளி நொச்சியின் போர்க்காலத்தில் தூய கல்விச் சேவை வழங்கி இன்று ஓய்ந்திருக்கும் அதிபர்,ஆசிரியர்கள் கோட்டக்கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியியலாளர்கள் என எல்லோரும் தற்போதைய வணிகமயமாக்கற் படுத்தப்பட்ட கல்வி நிலையங்களை வெறுத்துவருவதும் குழு வகுப்புக்களில் தம் பிள்ளைகளை இணைக்கும் கலாசாரம் தொடங்கிவிட்டமையும் இங்கு நினைவுபடுத்துவது நம் கடமையாகும்.
கிளிநொச்சியிலிருந்து உதயன்
பொறுப்பு துறப்பு: சுயாதீன பத்திரிகையாளர் உதயன் என்பவரால் அனுப்பட்ட பத்தியின் கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இதனை எழுதிய எழுத்தாளரே பொறுப்பு. இக் கட்டுரையின் எந்த கருத்தும் வணக்கம் லண்டனுக்குரியதல்ல. இது பற்றிய விளக்கங்கள், விமர்சனங்களை அனுப்பினால் பிரசுரிக்க வணக்கம் லண்டன் பரிசீலனை செய்யும்… vanakkamlondon@gmail.com