அறிமுக இயக்குனர் து. ப. சரவணன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் கதையின் நாயகனாக நடிகர் விஷால் நடிக்கிறார்.
‘அயோக்கியா’, ‘ஆக்சன்’, ‘சக்ரா’ என வரிசையாக தோல்வி படங்களை அளித்து வரும் நடிகர் விஷால், கட்டாய வெற்றி ஒன்றை வழங்கவேண்டிய நிலையில் இருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி விஷால் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தினை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்குகிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் அந்தப் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு மோஷன் போஸ்டர் மூலம் நேற்று முன்தினம் இணையத்தில் வெளியானது.
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,’ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகளை நோக்கி கேள்வி கேட்கும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த திருவாளர் பொதுஜனமாக விஷால் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.’ என்றார்.
நடிகர் விஷால் இப்படத்தின் கதையைக் கேட்டு வியப்படைந்ததாகவும், ‘துப்பறிவாளன் 2’ படத்தின் பணிகளை தள்ளிவைத்துவிட்டு இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.