இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் கொரோனா மரணங்கள் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கண்டியைச் சேர்ந்த (85 வயது) பெண்ணொருவரும் வெலிமடையைச் சேர்ந்த (72 வயது) பெண்ணொருவரும் பொரலெஸ்கமுவைச் சேர்ந்த (49 வயது) பெண்ணொருவரும் களுத்துறையைச் சேர்ந்த (77 வயது) ஆண்ணொருவரும் வத்தளையைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரும் மற்றும் நாவலப்பிட்டியவைச் சேர்ந்த (61 வயது) பெண்ணொருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 444ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது. இன்னும் 10 ஆயிரத்து 332 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.