டெல்லி: கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி தற்பொழுது 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று மன்கிபாத் எனப்படும் மனதோடு பேசும் நிகழ்ச்சியில் வானொலி மூலம் உரையாற்றிய அவர் தாம் பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூர்ந்தார். நாள் ஒன்றுக்கு 900 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தியான நிலையில் அது 9,500 டன்னாக உயர்த்தப்பட்டதாக அவர் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு சில மருத்துவமனைகளில் சிலமணி நேரம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை சம்மந்தப்பட்ட தனிநபர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். முன்கள பணியாளர்கள் சிலருடன் மோடி உரையாற்றினார். ஆக்சிஜன் கன்டெய்னர் லாரி ஓட்டுநர், ஆக்சிஜன் ரயிலை இயக்கிய பெண் ஓட்டுநர், விமானப்படை கேப்டன் ஆகியோரிடம் அனுபவத்தை கேட்டறிந்தார். 100 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவை முழு பலத்தோடு இந்தியா எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந்தொற்றில் இருந்து இந்தியா மீண்டுவிடும் என்று மோடி உறுதி அளித்தார். தொடக்கத்தில் கொரோனா பரிசோதனைக்கு ஒரு ஆய்வகம் இருந்த நிலையை மாற்றி தற்போது 2,500 ஆய்வகங்களில் பரிசோதனை நடைபெறுவதாக மோடி கூறினார். ஆரம்ப காலத்தில் தினந்தோறும் சில நூறு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது 20 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். தற்போது வரை நாடு முழுவதும் மொத்தமாக 33 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக மோடி கூறினார்.