இலங்கை உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் பற்றி அறிய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மாக்ஸ்வெல் பரணகாமா, ”காணாமல் போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே அதிகமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் காணாமல் போனவர்கள் வெகு சிலரே” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில், தமிழர்கள் வசிக்க தனி ஈழம் கோரி 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு சண்டை, 2009ல் முடிவுக்கு வந்தது. இந்த உள்நாட்டுப் போரின்போது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்களை காணவில்லை என, தமிழர் ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து விசாரிக்க அந்நாட்டு அரசால் அந்நாட்டு நீதிபதி, மாக்ஸ்வெல் பரணகாமா தலைமையில், மூன்று பேர் குழு, 2012ல் அமைக்கப்பட்டது. மன்னார் பகுதியில், நேற்று பொதுமக்களை சந்தித்த, பரணகாமா கூறியதாவது, இலங்கையின் வடக்கு பகுதியில் மட்டும் 3,300 தமிழர்கள் காணாமல் போயினர் என கூறப்படுகிறது. ஆனால், நமக்கு கிடைத்த மனுக்களின் எண்ணிக்கை வெகு குறைவாக உள்ளது.
அது போல், மன்னார் பகுதியில் 1.47 லட்சம் பேர் காணாமல் போயினர் என கூறப்பட்டது. ஆனால், 312 புகார்கள் தான் பெறப்பட்டுள்ளன. வேண்டுமென்றே பல ஆயிரம் பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் காணாமல் போனவர்கள், வெகு சிலரே. காணாமல் போனவர்கள் என கூறப்படுபவர்களில் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.